GURUVAMSAM 

வாழ்க   குருவம்சம்

 

                                                                                                   குருவம்சம்



முன்னுரை

சகோதர,சகோதரிகளே வணக்கம்.                                            

         தாங்கள் இறந்தவர்களை வணங்குபவராக இருப்பின்  நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். ஒவ்வொரு உடலிலும் ஒரு ஆத்மா உண்டு. இந்தஉடல் அழிந்த பின்பும் ஆத்மா வாழ்கின்றது. நாம் காணாத கடவுளை வழிபடுவதை விட நம்மோடு வாழ்ந்து மறைந்த ஆத்மாக்களை வணங்குவது சாலச் சிறந்தது. இறைவுலக வாழ்விற்கு  இறந்தவர்களை குருவாக தெய்வமாக வணங்குவது குருவம்சம் ஆகும். இக்கருத்து தாங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் உண்மையான கருத்தும் ஆகும். உலகில் பல மதங்கள் உள்ளன.ஒவ்வொரு மதமும் வெவ்வேறு வகையான பூஜைகளும் சடங்குகளும் ஏற்படுத்தியுள்ளது.

       ஒவ்வொரு மதமும் ஒருவரை அல்லது பலரை கூறி இவர் தான் கடவுள்,  இதுவே  அவரை வழிபடும் முறைகள் என்றும் கூறி வருகின்றது. சில மதவாதிகள் நடை - உடை- பாவனையி்ல் மற்றவர்களை விட வேறு படுத்தி நிற்கின்றார்கள். இது அவர்களுடைய இனங்களை கண்டு கொள்ளும் வழியாகும்.  

      சிலர் சில மொழிகளையே தேவவாக்காக உச்சரிப்பார்கள். மொழி என்பது மனிதர்கள் ஒருவருக்கொருவர் தன் கருத்தை மற்றவர்களுக்கு விளக்கும் ஓசையாகும். வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு விதமான மொழிகள் தோன்றியுள்ளது. ஆகவே ஒரு குறிப்பட்ட மொழியும் இறைவழிபாடாகாது. சிலர் ஆடுவதும் பாடுவதும் இறைவழிபாடு என்பார்கள். இறைவன் ஆடலுக்கும் - பாடலுக்கும் - வெளிவேஷங்களுக்கும் அப்பாற்பட்டவன். மொத்தத்தில் எந்த மதவாதிகளை பின் பற்றினாலும். உண்மை இறைவனைக் காணமுடியாது. இப்படி சொல்வதினால் " குருவம்சம் " இறைவன் இல்லை என்று கூறுவது கிடையாது.    உலக - அண்ட - ஆத்மா இயக்கத்திற்கு ஒரு மூலப்பொருள் உண்டு அதனை பரமாத்மா என்று கூறலாம். அநத பரமாத்மா இவர் தான் என்று கூறுவது தவறு. காணும் இயற்கையெல்லாம் கடவுளின் பிம்பங்களே, இறந்தவர்களே நம் தெய்வங்கள்.

        இறைவன் தன் இரகசியத்தை மனிதனின் இறப்பில் வைத்துள்ளான். இறப்பிற்குபின் தூய ஆத்மாக்கள் இறைவனோடு ஐக்கியபடுகின்றது. மற்ற ஆத்மாக்கள் அவரவர் பாவ - புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறவி எடுக்கின்றார்கள். ஒவ்வொரு மனிதர்களும் இறப்பிற்கு பின்னே இறைவனைப் பற்றியும், இறையுலக வாழ்க்கை பற்றியும் அறிய முடிகின்றது. புவியில் வாழும் மட்டும் உண்மை இறைவனைக் காண முடியாத நாம் இறப்பிற்கு பின் இறைவன் - இறைவுலகை அறிகின்றோம். ஆகவே உண்மை இறைவனையும் இறைவுலகை பற்றியும் இறந்தவர்களே அறிவார்கள்.

      இப்புவியில் இறைவனை இறைவுலகை காட்ட முடியாத மதவாதிகள் இறைவன் பெயரால் பொய்யான வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் ஏற்படுத்தி வருமானமும் - ஆதாயமும் தேடிக் கொள்கின்றார்கள். நாம் சிந்தனை சிறிதும் இல்லாமல் இவர்கள் வலையில் சிக்கிக் கொள்ளும்போது நமது பணமும் நேரமும் வீணாகின்றது. மற்றும் நம்மிடயே பிரிவுகள் உண்டாகுமே தவிர இதனால் யாதொரு பயனும் கிடையாது.  புவிவாழ்வில் உண்மை இறைவனை காண முடியாத நாம் இன்று இறைவுலகில் ஐக்கியமாகி இருக்கும் நம்மோடு வாழ்ந்து மறைந்த ஆத்மாக்களையும் மற்றவர்கள் இல்லத்தில் வாழ்ந்து மறைந்த தூய ஆத்மாக்களையும் இறைவுலக வாழ்விற்கு குருவாக - தெய்வமாக வணங்குவது சாலச் சிறந்தது.

       அவரவர் இல்லத்து ஆத்மாக்களையும் மற்றவர்கள் இல்லத்து ஆத்மாக்களையும் வணங்கும்போது நம்மிடையே சகோதரத்துவம் உண்டாகும். ஒன்றுபட்ட ஒரு சமுதாயம் உருவாகுவது உறுதி.

குருவம்சம்

பூரண ஞானம்

         புவியில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவராசிகளும் பூர்வீக கர்மாக்களின் கட்டுப்பாட்டிற்குள்தான் பிறக்கின்றது. முற்பிறவியில் புண்ணிய காரியங்கள் செய்தவர்கள் மகிழ்ச்சிகள் கலந்தும், பாவ காரியங்கள் செய்தவர்கள் துக்கங்கள் கலந்தும், பிறக்கின்றார்கள். இறந்தவர்கள் மீண்டும் பிறப்பதில்லை என்று கூறுவதெல்லாம் தவறானது. மண்ணில்  பிறந்து ஒழுக்கம் -நீதி -   தர்மம் கொண்டு வாழ்ந்து இறந்து போகும் தூய ஆத்மாக்கள் இறைவுலகம் சென்று இறைவனோடு ஐக்கியமாகிவிடும். மற்ற ஆத்மாக்கள் தன் பாவ - புண்ணியங்களுக்கு ஏற்ப மறு பிறவி எடுக்கின்றது.

                   மனிதர்கள் மீண்டும் மனிதர்களாத்தான் பிறப்பார்கள் என்பதல்ல, வேறு ஜீவராசிகளாகவோ பூமியில் அல்லது வேறு கிரணத்திலோ பிறக்கலாம், இது அவரவர் பாவ - பண்ணியங்களுக்கு ஏற்ப எழுதப்பட்ட தீர்ப்பாகும்.

               கண்களுக்கு உறக்கம் -  விழிப்பு இரண்டும் உண்டு. உடலுக்கு ஆரோக்கியம் -நோய் இரண்டும் உண்டு. மனதிற்கு மகிழ்ச்சி - துக்கம் இரண்டும் உண்டு. இது போல் தேவகுணம் அரக்கக்குணம் இரண்டும் நமக்குள் உண்டு. பிறக்கும் போது மனம் தூய்மையாகயிருக்கும். நாம் வளரவளர நம் மனதில் தேவகுணத்தை வளர்த்துக் கொண்டே சென்றால் இறுதி நாளில் நற்குணங்கள் பொருந்தியவர்களாக பலர் புகழ நல்லவர்களாக - தூயஆத்மாக்களாக வாழ்ந்து முடிப்போம். அரக்கக்குணம் வளர்த்து கொண்டே சென்றால் துஷ்டர்களாக பிறர் தூற்றும்வண்ணம் பாவ காரியங்கள் செய்த ஆத்மாவாக வாழ்ந்து முடிப்போம்.

                       எல்லா ஆத்மாக்களும் தூய வாழ்வு வாழ்ந்து இறைவனோடு ஐக்கியமாகும் நோக்கமாகவே இருககவேன்டும்.

இறைவன் உருவம்                 

            இயற்கையில் ஜீவராசிகள் உயிர் வாழ எத்தனையோ விந்தைகள் புதைந்து கிடக்கின்றது. இறைவன் இயற்கையின் வாயிலாகவே எல்லா ஜீவராசிகளையும் வாழவைக்கின்றான். இயற்கையின் மூலமே உலக இயக்கம் நடத்துகின்றான். ஆகவே நாம் காணும் ஒவ்வொரு இயற்கையும் கடவுளின் பிம்பங்களே. 

 குருக்கள் - தெய்வங்கள்            

          இயற்கையில் உள்ள விந்தைகள் கண்ட சில மனிதர்கள் இவற்றில் மற்ற ஜீவராசிகள் உயிர் வாழ மருந்தாகவும், விஞ்ஞான வளர்ச்சி கருவியாகவும், பொருட்களாகவும் நமக்கு தந்துள்ளார்கள். எத்தனையோ மனிதர்கள் வீணாகவும் சோம்பேறிகளாகவும், கொடூரமாகவும் காலத்தை கழிக்கையில் மற்ற ஜீவராசிகள் உயிர் வாழ பயனுள்ளவற்றை உருவாக்கியவர்கள்,மற்றும் தியாகிகளாக தன்னை சேர்ந்தவர்களுக்காக,மனிதகுலத்திற்காக வாழ்ந்தவர்கள் நம் வாழ்நாளில் கண்கண்ட தெய்வங்கள் என்பதில் சந்தேகமே இல்லை. எல்லா உயிர்களும் பிறந்து இறந்து போகையில் இவர்கள் மற்ற ஜீவராசிகள் பயன் பெற வாழ்ந்து இறவா புகழ் அடையும் தெய்வங்கள் ஆவார்கள்.

                              நாம் வணங்கவேண்டிய மனிதர்கள் விஞ்ஞானிகள், சமுதாய தியாகிகளாக வாழ்ந்தால்தான் வணங்கவேண்டும் என்பதில்லை, நாம் புவியில் வாழ நம் முன்னேற்றதிற்காக தியாகங்கள் செய்து அன்பு காட்டி வளர்த்த தாய் தந்தை மற்ற உறவுகள் நேசமுடன் நம்மோடு வாழ்ந்த சகோதர சகோதரிகள் பிள்ளைகள் நண்பர்கள் இறந்தபின் இறைவுலக வாழ்விற்கு குருவாக தெய்வமாக வணங்குவதே குருவம்சம் முறையாகும்.

இறப்பை வைத்தே மதம்

        இறைவன் உண்டு என்று இயற்கை வாயிலாக உணர்ந்து கொண்ட நாம் மனிதன் படைத்த மதத்தை கொண்டு இறைவனை அடையவே முடியாது. இறைவன் படைத்த ஆத்மாவை கொண்டு இறைவனை இறைவுலகை உணரலாம். எல்லாமதங்களும் மனிதனின் இறப்பிற்கு பின் ஆத்மா உண்டு என்ற காரணத்தை வைத்துதான் உருவாகியுள்ளது. இதில் இறந்தவர்களுக்கே முன்னுரிமை தரப்பட்டுள்ளது ஆகவே மரணம் என்று ஒன்று இல்லாவிட்டால் நாம் இறைவனை பற்றி சிந்திக்க போவதே இல்லை.

ஆத்மா இயக்கம்

காலையில் உதயமாகும் சூரியன் மாலையில் அஸ்தனமாகின்றது. மறுநாள் காலையில் மறுபடியும் உதயமாகின்றது. முந்திய நாள் மறைந்த சூரியன் வேறு இன்று உதயமாகும் சூரியன் வேறு, என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? இரண்டும் ஓன்றுதான் என்று மிகதெளிவாக கூறுவீர்கள். பூமி தன் காலச் சக்கரத்தில்  சுழன்று காலை மாலையாகி இரவுக்கு பின் மீண்டும் காலை மாலையாகின்றது. சூரியனின் உதயமும் அஸ்தமும் இதனால் நடைபெறுகின்றது. இதில் சூரியன் நிலையானவையே.  இது போல் ஆத்மா காலச் சக்கரத்தின் சுழற்சியில் பிறப்பு - இறப்பாகி இறைவுலகம் சென்று மீண்டும் பிறப்பு - இறப்பாகின்றது. இதில் ஆத்மா  நிலையானவையே.

           இயற்கையில் எல்லா பொருட்களும் தோன்றி மறைந்து இறுதியில் தன் மூலப்பொருளாகவே மாறிவிடும். கடல் நீர் ஆவியாகி மேலே சென்று மேகமாகி, குளிர் காற்று பட்டு மழையாக பொழிந்து, அருவியாகி,ஓடையாகி, நதியாகி இறுதியில் கடலில் கலந்து, மறு படியும் கடல் நீர் ஆவியாகி விடுகின்றது. இதுவே இயற்கையின் காலச்சக்கரம். இந்த காலச்சக்கரம் இயற்கையின் எல்லா பொருட்களிலும் எல்லா நிலைகளிலும் உண்டு.  

               ஆத்மா இறைவனால் இயற்கையில் படைக்கப்பட்டதே. இதுவும் காலச்சக்கரத்தில் சுற்றப்டுபவைதான்.

              நாம் வாழ் நாளில் புவியில் செய்த பாவ - புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறவி எடுகின்றோம். ஒழுக்கம் - நீதி - தர்மம் கொண்டு வாழ்ந்து ஜீவகாருண்யம் கடைபிடித்து அனைத்து ஜீவராசிகளுக்கும் உதவிகள் செய்து, மனித நேயம் கொண்டு மற்றவர்களை நேசித்து தூய ஆத்மாவாக வாழ்ந்து பிறவி கடலை கடந்தால், இறைவுலகம் அடைந்து இறைவனோடு ஐய்க்கியப்பட்டு, மூலப்பொருள் பரமாத்மாவுடன் கலந்து விடுவோம் என்பது உண்மை.

 

இறைவழிபாடு


    ஒழுக்கம் -நீதி – தர்மம் கொண்டு வாழ்வதே உண்மை இறைவழிபாடாகும். மதவாதிகள் ஆளுக்கொரு தெயங்களை படைத்து இவர் தான் தெய்வம், அவர் தான் தெய்வம் என்றுக் கூறிக்கொள்வது பொய்யும் புரட்டும் ஆகும். மதவாதிகள் இறைவனை கண்டதும் இல்லை, நமக்கு காட்டப்போவதும் இல்லை. இவர்கள் இறைவன் பெயரை வைத்து ஆதாயம் தேடுபவர்கள். 

         இதில் சடங்குகள் உருவாக்கியுள்ளார்கள். பிறந்தால் - இறந்தால் சடங்கு, சாமி கும்பிடசடங்கு,  பேசச்சடங்கு, பாடச்சடங்கு என்று ஆயிரகணக்கான சடங்குகளை உருவாக்கி வைத்துள்ளார்கள். இவை எல்லாம் இறைவனை காணும் வழிகளா? அல்லது இறைவுலக சடங்குகளா? யார் கண்டது? இது பொய்யர்கள் கூறும் கபடநாடகம்  மட்டும் அல்ல மதங்கள் பெயரால் மனிதர்களைப் பிரிக்கும் சதிகள் ஆகும். இது மனிதத் தன்மைகளை பிரித்து மிருகங்களாக்கி உன் மதம் என் மதம் என்று சண்டைகளை உருவாக்கி, தான் மட்டும் ஆதாயம் தேடிக்கொள்ளும் வழிமுறையாகும்.

              ஜனனம் முதல் மரணம் வரை புவியில் வாழ்ந்து இறைவுலகை நோக்கி பயணம் செய்யும் நாம், தூயவர்களாக நல்லவர்களாக ஒழுக்கம் -நீதி -தர்மம் கொண்டு வாழ்ந்து முடித்திருந்தால், இறைவுலகை நோக்கி செல்கையில் அங்கே எந்த கடவுள் இருந்தால் என்ன? நல்லவர்களாக வாழ்ந்து முடித்தவர்களை அங்கே எப்படி தண்டிக்க முடியும்?                                      

             இறைவன் தன்னை பூஜைகள் - சடங்குகள் கொண்டு வணங்கவில்லை என்ற காரணத்திற்காக தண்டிப்பார் என்று பயப்படவும் தேவையில்லை. ஏன் என்றால் உண்மை இறைவன் தன்னை வணங்கச் சொல்லும் சர்வதிகாரி கிடையாது. அவர் இந்த உலகில் நேரில் வந்து தன்னை வணங்கச் சொன்னதும் கிடையாது. அப்படி வணங்கினால்தான் உன்னை காத்தருள்வேன் என்று கூறினால் அவன் இறைவனே கிடையாது.  ஒழுக்கம் - நீதி - தர்மம் கொண்டு வாழ்ந்த நாமே இறைவனை விட மேலானவர்கள் ஆகும்.

               உண்மையில் பரமாத்மா ஒழுக்கம்-நீதி-தர்மம் கொண்டு வாழ்ந்தவர்களையே இரட்சிப்பார்.  அவர்களுக்கே பரிட்சமானவராவர். அதுவே இறைவன் வழிபடும் முறையாகும்.

             இறைவன் இல்லை என்று சொல்பவர்கள் கூட ஒழுக்கம்-நீதி-தர்மம் கடைபிடித்து வாழ வேண்டும்.அதுவே மனித தன்மையாகும். இறைவனே கிடையாது என்று கூறிக்கொண்டு ஒழுக்கம்-நீதி-தர்மம் அற்ற செயல்களாக செய்யக்கூடாது. இது மிருகநிலையாகும். இதனை தூயவர்கள் அனைவரும் ஒப்புகொள்ளவேண்டும். தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்களே  உயர்ந்தவர்கள். இதுவை உண்மை இறைவனின் நோக்கமும் ஆகும். அதுவே இறைவனை வணங்கும் வழிபாடாகும்.

மனதை தூய்மையாக்கி சமர்பித்தல்


நம் சொருப - சூச்சம உடலிகளில் மனம்தான் உயர்ந்தது. அதனால்தான் மனம் நம் உடலில் எங்கேயிருக்கின்றது என்று கண்டு பிடிக்க முடியவில்லை. மனதை தூய்மையாக்கி தெய்வத்திடம் சமர்ப்பித்தாலே போதுமானது. மனதை தூய்மையாக்க ஒழுக்கம் - நீதி தர்மம் கொண்டு நடந்தால் தூய்மையா விளங்கும். மனம் தூய்மையாக இருந்தால் நாம் எந்த செயல் செய்தாலும் தூய்மையாகயிருக்கும். இதனையே கன்னியம் களிப்பைத் தரும் என்றும் கூறலாம்.         

                தவறு செய்த மனம் தூய்மையடையாமல் பதட்ட நிலையிலேயேயிருக்கும் எப்பொழுதும் ஒழுக்கம் - நீதி - தர்மம் தவறாது  இருங்கள். எப்பொழுதும் மனம் தூய்மையாக மகிழ்ச்சியாகயிருக்கும்.

            இதனை செய்ய  முடியாதவர்கள் மற்ற புறம் பொருட்களைக் கொண்டு பக்தி போல் பூஜைகள் செய்வார்கள். உடலை வினோதமாக அலங்காரம் செய்து  கொண்டு பக்தர் போல நடப்பார்கள்.

வேண்டாத மத போதனைகளும் - புராணங்களும்

              ஒவ்வொரு மதத்திலும் நீதி போதனை என்ற பெயரில் பெரிய பெரிய புராணங்கள் உண்டு. எந்த புராணங்களையும் மதபோதனைப் புத்தகங்களைப் படிக்கும் போது இந்த ஒழுக்கம்-நீதி-தர்மம் பற்றி விளக்க பற்பல கதைகள் சுவாரசியமாக கூறப்பட்டிருக்கும். இது மனப்பக்குவம் அற்ற நிலையில் உள்ளவர்களுக்காக கூறப்பட்டுள்ளது. ஆகவே நாமும் பக்கம் பக்கமாக புராண காவியங்கள் படிக்கவோ எழுதவோ தேவையில்லை.

             பாவ - புண்ணியங்கள் எவை என்று நாம் தனித்தனியாக பிரித்து கூறத் தேவையில்லை ஒழுக்கம் -நீதி - தர்மம் அற்ற முறையில் செய்யும் காரியங்கள் எல்லாம் பாவங்கள் ஆகும். ஒழுக்கம் - நீதி - தர்மம் கொண்டு செய்பவைகள் எல்லாம் புண்ணியச் செயல்கள் ஆகும்.

          ஒழுக்கம் - நீதி - தர்மம் கொண்டு வாழ்வதே பாவச் செயல்களில் இருந்து மீளவும், உண்மை இறைவனை அடையும் வழி என்று தெரிந்து கொண்டு அதன் வழி நடந்தால் முறையான வாழ்க்கையாகும். ஆதலால் புராணங்களை ஏற்று என் மதம் உன் மதம் என்று பிரிந்து நிற்கக்கூடாது.

நம் வருங்கால சந்ததியினர்


             சிறுகுழந்தைகள் வளர்ந்து வரும் போது மதங்கள், பூஜைகள், சடங்குகள் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை உண்மை இறைபாடு ஒழுக்கம் - நீதி - தர்மம் என்பன பற்றியும், கல்வியும், உழைப்பின் பெருமையை பற்றியும் சொல்லி கொடுக்கவேண்டும். இது வருங்காலத்தில் அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் வளமிக்க ஒரு எதிர் காலத்தை உருவாக்கும் என்பது உறுதி.

              இறைவனைப் பற்றி மதவாதிகள் கூறிய கதைகள் ,பூஜைகள், சடங்குகள் கூறுவதை விட்டுவிட்டு அவர்கள் தூயவர்களாக வாழ போதனைகள் கூறுங்கள். அவர்கள் வாழ்வு வளமாக அமையும். அவர்களுக்கே சுயமாக சிந்திககும் பருவம் வரும் போது இறைவனை பற்றி திறம்பட சிந்தித்து இவ்வாறே வழிபடட்டும். மதம் என்ற மூடத்தன்மை மறைந்து ஒற்றுமையான சமுதாயம் உறுதியாக உருவாகும்.

மரணமே நம் சொத்து

          மெய்யான இறைவனைப் பற்றி முழுமையாக அறிய வேண்டுமாயின் அது நம் இறப்பிற்குப் பின்னே தெளிவாகத் தெரியும். எல்லா ஜீவராசிகளும் இறைவனை - இறைவுலகை அறிந்துகொள்ள இறைவன் அளித்த வாய்ப்பு மரணம் ஆகும். மரணத்தின் வாயிலாக நம் இறைவனை - இறைவுலகை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். ஆகவே மரணம் என்பது இறைவன் நமக்கு அளித்த சொத்தாகும்.                

            மதம் என்பதும் இறைவன் என்பதும் வேறு வேறாகும். மதம் என்பது மனிதன் உருவாக்கியது. இறைவன் என்பது பரம்பொருள். மதங்களுக்கு பொதுவான கொள்கை கிடையாது. இதனை அவரவர் மனம் கொண்டு சிந்திக்கவேண்டும்.நம் குடும்பத்தில் ஒவ்வொருவரும் இறைவனைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் கொண்டு இருக்கலாம். அது அவரவர்கள் கருத்தாகலாம். குருவம்சம் கருத்துக்கள் கூட மற்றவர்கள் மேல் திணிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. நம் மரணத்திற்குப் பின்தான் உண்மை இறைவனை பற்றி அறிய முடியும்.ஆகவே மரணத்தைப் பற்றி அஞ்சத் தேவையில்லை. நம் ஜனனம் முதல் இறுதி வரை இந்த மரணம் நம்மை தொடர்ந்து வருகின்றது. கரிய இருட்டில்கூட நம் நிழல் மறைந்து விடும். ஆனால் மரணம் நம்முடனே இருக்கும். அது எப்பொழுது எஙகே ஏற்படும் என்பது தான் இறைரகசியமாக உள்ளது. ஆகவே இறைவனுக்கும் - இறைவுலகிற்கும்   தொடர்பை ஏற்படுத்தி தரும் இம் மரணமே இறைவன் நமக்கு வழங்கிய சொத்தாகும்.

 புனித இடம் - புனித நேரம்

        உலகில் எல்லா இடங்களும் இறைவன் பார்வை உள்ள இடங்கள்தான். இதில் இந்த இடம்தான் இந்த ஊர்தான் புனிதமானவை என்று சொல்வதற்கு இல்லை. ஒரு ஊரை புனிதம் என்று கூறி பெருமை படுத்தி கூட்டம் கூட்டுவது அவ்வூரின் வியாபாரத்தை பெருக்குவதற்கு தான். இதனால் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மற்ற இடங்களில் இருந்தெல்லாம் பணம் வந்து சேரும் என்பதற்காக சந்தர்ப்பவாதிகள் கூறும் வார்த்தை தான் புனித இடம் புனித ஊர் என்பதாகும்.

           குருக்களை வணங்க நாள் கிழமை பார்க்க தேவையில்லை. நமக்கு இன்ப - துன்பங்கள் ஏற்படும் போதெல்லாம் மன அமைதி - சாந்தி கிடைக்க குருக்களை எந்த நாட்களிலும் - எந்த நேரத்திலும் வணங்கலாம்.

வணங்கும் போது

           இதற்கு பூசாரி, மதவாதிகள், இடைதரகர்கள், மந்திரவாதிகள் தேவையில்லை.  கூட்டமாக சேர்ந்து கொண்டு ஆடுவதும் பாடுவதும் இறைவழிபாடு கிடையாது. தியான முறையில் அமைதியாக முறையிட்டு வணங்குவதே முறையாகும்.

            நாம் எக்காரணம் கொண்டும் மதவாதிகள், ஓவியர்கள் வரைந்த படங்கள் மனிதர்கள் உருவாக்கிய வேதங்கள் மந்திரங்கள் தந்திரங்கள் பூஜைகள் கூடவேகூடாது.இது அவர்கள் பிழைப்புப்பாக உண்டாக்கியவை என்று உணர்ந்து அதனை ஒதுக்கிவைத்து விட்டு, உண்மை இறைவனை கண்ட ஆத்மாக்கள் நமக்கும் இறைவனுக்கும் இடையில் இருப்பதால் அவர்களை வணங்கினால், அவர்கள் நம் இன்ப - துன்பங்களை உண்மை இறைவனிடம் எடுத்து செல்லும் தெய்வங்களாக விளங்குவார்கள்.

             அதே நேரத்தில் அவர்கள் புவியில் வாழ்ந்தகாலத்தில் உடுத்திய ஆடையைப் போன்றோ, பேசிய மொழியைப் போன்றோ, தேவையற்ற முறையில் வாழ்ந்த வாழ்கையைப் போன்றோ நாம் பின் பற்ற வேண்டியதில்லை. இறைவுலக வாழ்விற்கு மட்டும் குருவாக - தெய்வமாக வணங்கினால் போதுமானதே.

             உங்கள் இல்லததின் வாசலில் வாழ்க குருவம்சம் என்று எழுதி அதன் கீழ் நீங்கள் வணங்கும் குருக்ளின் பெயர்களை எழுதி துணை என்று எழுதி வையுங்கள். இதனை அவரவர்கள் விருப்பமான மொழியில் எழுதிக்கொள்ளலாம். இதனை பார்க்கும் அனைவரும், வாழ்க குருவம்சம் என்று சொல்லும் போது கீழ் எழதப்பட்ட குருக்களின் வம்சங்கள் வாழ்தப்படுவார்கள். குரு துணையென்று படிக்கும் போது அவர்களுக்கும் குருவின் ஆசீர்வாதம் கிடைக்கும். 

                                          _____________________________________________________________________________________________

                                                                                              வாழ்க குருவம்சம்

                                                                                       குரு...............................துணை

                                                                                       குரு...............................துணை

                                                                                       குரு...............................துணை

                                                                                       குரு...............................துணை

                                                           காணும் இயற்கையெல்லாம் இறைவனின் பிம்பங்களே.

                                                                          இயற்கை எய்தியவர்கள் நம் தெய்வங்கள்.

www.guruvamsam.com

                                           _____________________________________________________________________________________________

 வழிபடும் நாட்கள் மற்றும் முறைகள்


         இறைவனை வழிபடத் தேவையில்லை என்றும் தூயவாழ்வு வாழ்ந்தால் போதுமானதே என்றும் கூறும் போது ஆத்ம வழிபாடு மட்டும் ஏன்? என்று கேள்வி எழுகின்றது. நாம் புவியில் வாழும் காலத்தில் பணம்,பதவி, பொருளுக்காக அன்றி மனஅமைதி ,சாந்தி, நிம்மதி, ஆயுள்,   நோயற்ற வாழ்வு வேண்டியும், துன்பங்கள், துயரங்கள், துஷ்டர்கள் நம்மை நெருங்காமலும்,   நாம் தூய்மை ஆத்மாவாக வாழ்ந்து முடிக்கவும் நம் முன்னோர்களை வணங்குகினால் அவர்கள் நம்மை ஆசீர்வாதிப்பர்கள் என்பது உறுதி.

 நாள்

        தினமும் காலை எழுந்தவுடன் உங்கள் இல்லத்து ஆத்மாக்கள் அனைவரையும் மனதில் நினைத்து, ஓரிரு நிமிடங்கள் மனதில் வணங்குங்கள். அன்றைய நாளில் நடக்கும் இன்ப சம்பவங்களுக்கு முன்னோர்களுக்கு நன்றி சொல்லுங்கள் துன்பங்கள் வரும் போது உதவிட அழையுங்கள். மாலையில் வீட்டில் விளக்கேற்றி அனைத்து ஆத்மாகளையும் நினைத்து வணங்குங்கள். உங்கள் குருக்கள் உங்களை ஆசீர்வாதிப்பார்கள்.

 மாதம் மற்றும் பௌர்ணமி வழிபாடுகள்

      நம் வீட்டில் மரணம் ஏற்பட்டிருந்தால் மரணம் அடைந்த முப்பதாவது நாள் அல்லது  மரணம் அடைந்த மாதத்தில் விருப்பமான நாளில் இறந்தவர் புகைபடம் அவர் உபயோகித்த பொருட்களை  மலர்கள் வாசனை பொருட்களை கொண்டு அலங்காரம் செய்யுங்கள். படத்திற்கு முன்பு சுத்தமாக தயாரித்த உணவு,இனிப்பு வகைகள், பழவகைகள் படையல் படைத்து விளக்கு ஏற்றி குடும்பத்தில் உள்ளவர்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக வணங்குங்கள். அன்றைய நாளில் அவர் பெயரில் பசியுள்ளவர்கள் இடம் தேடிச் சென்று அன்னதானமாக உணவை வழங்குங்கள். அனைவரும் இதனை பிரசாதமாக நினைத்து உண்டு, தங்கள் கோரிக்கையை ஆத்மா விடம் சமர்பித்து வணங்குங்கள் ஆத்மா மகிழ்ந்து ஆசீர்வதிப்பார்கள்.  

           முப்பதாவது நாளுக்கு பின்வரும் பௌர்ணமியில் இருந்து  இறந்த ஆத்மாவை பௌர்ணமி பூஜையில் அனைத்து ஆத்மாக்களையும் வணங்கும் போது ஒன்றாக சேர்த்து வணங்கினால் போதுமானது. இனி வரும் மாதங்களில் அவர்களுக்கென்று மாதம் மாதம் தனியாக நாள்வைதது வணங்கவேண்டாம்.

 

                பௌர்ணமி நாளில் உங்கள் இல்லத்து அனைத்து ஆத்மாக்களையும் நினைத்து மாலையில் தீபம் ஏற்றி ஒரு குவளையில் அல்லது கிண்ணம் ஒன்றில் சுத்தமான தண்ணீர், இனிப்பு பலகாரம் படைத்து உதிரி பூக்கள் கொண்டு பூஜுத்து வணங்குங்கள். அன்று அல்லது அந்த மாதத்தில் சௌகரியபடும் ஒரு நாள் ஓரிருவர்க்காவது அன்னதானமாக பிரசாதம் வழங்குங்கள்.  உங்கள் இல்லத்து ஆத்மாக்கள் மகிழ்ந்து உங்களை பூரணமாக ஆசீர்வாதிப்பார்கள்.  குருவின் ஆசி பெருவீர்கள்.

  ஆண்டு பூஜை


                   இறந்தவர்களின் ஒரு ஆண்டு முடிந்த பின் வரும் இறந்த தேதி அன்றோ அல்லது அந்தமாதத்தில் சௌகரியமான நாளில் இறந்தவர்களுக்கு ஆண்டு பூஜை செய்யலாம். இதனை இறந்த மாதத்தில் செய்த முப்பதாவது நாள் மாத பூஜை போல் செய்யுங்கள் பூஜையில் உங்கள் இல்லத்தில்  இறந்த முன்னோர்கள் மற்றும் அவர்கள் விரும்பிய உறவினர்கள், நண்பர்கள் இறந்து போயிருந்தால் அவர்கள் புகைபடங்களையும் வைத்து உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்து, அனைவரின் கோரிக்கைகளையும் சமர்பித்து குருவை வணங்குங்கள். குருக்கள் மகிழ்ந்து வணங்கும் அனைவர்களையும் ஆசீர்வாதிப்பார்கள்.

                        முதல் ஆண்டு பூஜைக்குப் பின், ஒவ்வொரு ஆண்டின் சித்திரை மாத பூரண பௌர்ணமி நாள் அன்று ஆண்டு பூஜை செய்யுங்கள். வருடத்தில் மற்ற நாளில் ஆண்டு பூஜை செய்ய வேண்டாம்.

                     ஒவ்வொரு ஆண்டும் பூமி,சூரியன் மற்றும் சந்திரன் பூமத்தியரேகையின் நேர்க்கோட்டில் வரும் சித்திரை மாத பெளர்ணமி அன்று அனைத்து குருக்களுக்கும் பொது மகா குரு பூஜையாக வணங்குங்கள்.  

                          அனைவர் இல்லத்து குருக்களுக்கும் அந்த நாளில் வணங்கும் போது மற்றவர்களின் மனகுறைகளைக் கேட்டு தெரிந்து கொண்டு மற்றவர்களுக்காகவும். வணங்குங்கள். மற்றவர்கள் இல்லங்கள் செனறு அவர்கள் குருக்களயும் வணங்கி அனைத்து குருக்களின் ஆசிகளையும் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடையுங்கள். குருபூஜை முடிந்ததும் அன்னதானம் வழங்குஙகள்.  சிறுசிறு உணவு பொட்டலங்களாக தயாரித்து  அதன் மேல் உங்கள் குருக்களின் பெயர்களை எழுதி பிரசாதம் என்று குறிப்பிட்டு பசியுள்ளவர்களின் இருப்பிடம் சென்று அன்னதானமாக வழங்குங்கள். குருக்கள் மகிழ்ந்து உங்களை ஆசீர்வாதிப்பார்கள்                                   நம் காலங்கள் முடிந்து விட்டாலும், நம் சந்ததியினர் நம் முன்னோர்களின் இறந்த தேதி தெரியாமல் அல்லது மறந்து போனாலும், நாம்நடத்தும் பொது மகா குரு பூஜையால் நம் வம்சாவழிகளுக்கு குருக்களின் பூரண ஆசீர்வாதம் ஆயுளுக்கும் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

 ஆத்மா ஆலயங்கள்

                     வசதிகளும் வாய்ப்புகளும் உள்ளவர்கள் தாங்கள் விரும்பும் ஆதமாக்களுக்கு ஆத்மா ஆலயம் அமையுங்கள். மயானம் என்பது நாம் வணங்க வேண்டிய  ஆலயம் ஆகும்.  மயானத்தை சிலர் அசிங்கப்படுத்துவதும், மலஜலம் கழிப்பிடமாக பயன்படுத்துவதும, சமூக விரோதிகளின் புகலிடமாக விளங்குவதாலும், நாம் முகம் சுழிக்கும்படியான இடமாக உள்ளது. தங்கள் இல்லத்து ஆத்மாக்களுக்கும் மற்றவர்கள் இல்லத்து ஆத்மாக்களுக்கும் ஒன்று சேர்ந்து வணங்க ஒரு புணிதமான இடத்தை ஏற்படுத்தி வழிபடுவது  நன்று. அதுவே ஆதமா ஆலயம் ஆகும். 

                      நீங்கள் அமைக்கும் ஆலயத்தில் பிரதான நிலையில் உங்கள் விருப்பமான ஆத்மாவிற்கு பீடம் அமையுங்கள். இருபுறமும் மற்றவர் இல்லத்து ஆத்மாகளை விளக்கேற்றி வைத்து வழிபட வசதிகள் செய்து கொடுங்கள். நடுவில் தியான மண்டபம் அமையுங்கள். ஆத்மா ஆலயத்தில் ஆத்மா சன்னதிக்கு முன் திருமணம் மற்றும் நல்ல காரியங்கள் செய்யலாம். இன்ப - துன்பங்கள் முறையிட்டு நல்ல வழிகாட்ட வேண்டிக்கொள்ளலாம்.

முடிவுரை

      குடும்பத்தில் தாய் -  தந்தைக்கும் - பிள்ளைக்கும் - மற்ற உறவுகளுக்கும் - நண்பர்களுக்கும் இடையே இக்கருத்தில் வேறு பாடுகள் இருக்கலாம், தங்களுக்கு மட்டும் இக்கருத்து உண்மை என்று விளங்கலாம். ஏன் இதனை எதிர்ப்பவர்கள் கூட வாழ்நாளில் ஒரு நாள் இதுவே உண்மை என்று உணருவார்கள்.

       சிலர் இறைவுலகம் - இறைவன் பற்றிய சிந்தனை எல்லாம் தன் வயதான காலத்தில் எண்ணிக் கொள்ளலாம் என்று ஒதுக்கிவிடுவார்கள். இவர்கள் மரணத்தின் முடிவு அறியாதவர்கள். எந்த வயதினர்களாகட்டும் இவ்வழி கடைபிடிப்பார்களானால் முதுமைவந்தாலும், மறுமை வந்தாலும் மனமகிழ்ச்சியடைவார்கள். வாழ்நாளில் தான் வாழ்ந்த தூய வாழ்விற்காக பெருமை படுத்தப்படுவார்கள். இதுவே பூரண ஞானமும் ஆகும்.

கருத்து அறிவுரை

           இதனை கூறுவதால் நான் ஒரு மந்திரவாதியோ, மாயாவாதியோ அல்ல. மயானம் ஒன்றில் ஞானம் பெற்ற நான். பெற்ற ஞானத்தை  " குருவம்சம் " ஆக விளக்குகின்றேன். நான் குறி சொல்வதையும், மீடியமாக பேசி பதில் சொல்வதையும் விரும்பாதவன். ஆத்மாக்கள் உண்டு என்று உணர்ந்த காரணத்தால் தூய ஜீவாத்மா இறப்பிற்குப் பின் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடுகின்றது என்பதனை தெரிந்து கொண்டதை " குருவம்சம் " ஆக உருவாக்கி தங்களை ஆத்மா வழிபாடு செய்து பயன் உணர இதனை முறை படுத்தியுள்ளேன்.

            இதனால் நம்மிடையே சகோதரத்துவம், மற்றும்  ஒன்று பட்ட ஒரு சமுதாய வழிபாடும் உருவாகுவது உறுதி. கடவுள் பெயரால் சண்டையிட்டுக் கொள்வது, வீணாக நேரத்தையும், பணத்தையும் செலவு செய்வது தவிர்க்கப்படும் உண்மை. இது வரை கடவுள் என்ற பெயரில் மதவாதிகள் நாம் பார்க்காத கடவுளை ஒரு உருவம் காட்டி சடங்குகள் உருவாக்கி நம்மை பிரித்தார்களே தவிர இதனால் யாதொரு பயனும் கிடையாது.

             நாம் புவியில் வாழும் மட்டிலும் பணம் -பதவி -பொருளுக்காக அன்றி மனஅமைதி - சாந்தி -நிம்மதி - நோயற்ற வாழ்வு - ஆயுள் வேண்டி, நம் இல்லத்து ஆத்மாக்களை வணங்கி, ஒழுக்கம் - நீதி - தர்மம் கொண்டு வாழ்ந்து, மனிதநேயத்தோடு மற்றவர்களுக்கு  உதவிகள் செய்து, எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டி வாழ்ந்து முடிப்பதே உண்மை இறைவழிபாடாகும். 

               குருவம்சத்தில் எழுதப்பட்ட இப்புத்தகமே தொடக்கமும் முடிவும் ஆகும். இதனை பக்கம் பக்கமாக எழுதப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏன் எனில் இது திடகர்த்தமான உறுதியான வழிபாடாகும். பல தடவை இவ்வசனங்களை உபதேசிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் இக்கொள்கை சுயமாக சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே இணையும் கொள்கையாகும்.

             எவை எல்லாம் மதம் எனப்படுகின்றதோ அவைகள் இல்லாததே " குருவம்சம் " ஆகும். இதனை நான் கூறுவதால் என்னை பெரிதாக காட்டிக் கொள்வதற்காக அல்ல. இக்கருத்தை யார் மீதும் திணிக்கும் எண்ணமும் எனக்கில்லை. இது உங்கள் இல்லத்து குருக்களை தெய்வமாக வணங்கும் இயக்கம் ஆகும். ஆகவே இக்கொள்கையுள்ளவர்கள்,

" காணும் இயற்கையெல்லாம் கடவுளின் பிம்பங்களே

இயற்கை  எய்தியவர்கள் நம் தெய்வங்கள்"  

என்று பெருமைபடுங்கள். உங்கள் இல்லத்தில் இயற்கை  எய்தியவர்களையே வணங்குங்கள். அவர்களே உங்கள் இன்ப - துன்பங்களை உண்மை இறைவனிடம் எடுத்துச் செல்லும் தெய்வங்கள் ஆகும் என்று உறுதியாக நம்புங்கள். உங்கள் இல்லத்து ஆத்மாக்களை மேல்நிலையில் வைத்து வணங்குவதால் ஆத்மாக்களின ஆசீர்வாதங்கள் மகிழ்ச்சியுடன் பெற்று பூரண பயன் உணர்வீர்கள்.

                    தொழில் நுட்ப வளர்ச்சியால் உலகம் முனனேற்ற பாதையில் அறிவு பூர்வமான மாற்றத்தை அடைந்து வருகின்றது. மதவாதிகள் முன்பை காட்டிலும் அதிகமாக மதம் என்பதை வலுப்படுத்த முயல்கிறார்கள். இதற்கு இந்த தொழில் நுட்பத்தையே பயன்படுத்துகிறாரகள்.

                 சமூக அமைப்பு பேசுகிறார்கள்.  மதம் என்ற  பெயரால் சமூகத்தை பிரித்து மகிழ்கிறார்கள்.    இறைவன் ஒன்று அனைவரும் சகோதர - சகோதரிகள் என்று பேசுவோர் மறுநிமிடமே மதம் என்று கூறி ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு உயிர் பழிவாங்கி சமூகத்தை பாழ்படுத்துகிறார்கள். மதம் சமூகத்தில்  வியாபாரம்,கல்வி, தொழில், திருமணம், முன்னேற்றம் என்று அத்தனை இடங்களிலும் மறைமுகமாக,நேரடியாக மனிதவாழ்வைப் பிரித்து வைக்கின்றது. திருமணம் என்று வரும் போது கூட மதம் மாறினால்தான் திருமணம் என்று வாய்கூசாமல் மதவாதிகள் பேசக்கேட்டது உண்டு்.இறைவன் ஒருவனே என்று பேசும் வாய்கள் எல்லாம் அபபோது மூடிக்கொள்ளும். மனித உரிமை பேசுவோர் கூட இதனை வாதிடமாட்டார்.

                முன்னொரு காலத்தில் சூரியன் சந்திரன் மற்ற கோளங்கள் தன்னை சுற்றுவதாக மனிதன் நினைத்தான். பூமி உருண்டை வடிவமானது, அது தன்னை தானே சுற்றுவதால் இரவு பகல் வருகின்றது என்று தெறிந்தபின் பழைய  எண்ணதை மாற்றிக் கொண்டான். பழமை பேசுவோருக்கு புத்தி சொன்னான். சமூகம் தன் தவறை திருத்திக் கொண்டது.

             மதங்கள்  மனித முன்னேற்றத்தில் தேவையில்லாத ஒன்று.  மாறும் சமூக முன்னேற்ற காலத்தில் மதம் தேவையே இல்லை என்று சமூக சிந்தனையார்கள் மட்டுமை உணர முடிகின்றது.

             கண்களுக்கு புலப்படாத அணுக்களின் கூட்டு சேர்க்கையால் உலக  பொருள்கள்,மற்றும் ஜீவராசிகள் உருவாகின்றது என்பதை தெரிந்து கொண்டோம்.  இவைகளுக்கு மூலப்பொருள் உண்டு என்பதனையும் அறிவு பூர்வமாக ஏற்று கொண்டோம்.  

             நம்மால் நல்லவைகளைச் செய்யமுடிகின்றது. நல்ல மனிதர்கள் நல்ல செயல்களால் தெய்வங்களாகிறார்கள். நல்ல மனிதர்கள் செய்யும் உதவியால் தெய்வமாக நினைக்கின்றோம். நம வாழ்விற்கு உதவிய தாய் தந்தை சகோதரன்,சகோதரி, மற்ற உறவுகள் நண்பர்கள் புவியில் வாழும் போதும், இறந்த பின்பும் தெய்வமாக நினைக்கின்றோம்.

.                இறந்த பின் மனிதனுக்கும் இறைவனுக்கும் நடக்கும் நிகழ்ச்சியை மையமாகவைத்து தோன்றியதே மதங்கள். இறைவனை பற்றிய சிந்தனை கற்பனையளவில்தான் முடியும். ஆத்ம வாழ்வில் பரமாத்மாவோடு நம் ஆத்மா இணையும் வரை நாம் ஒழுக்கம் -நீதி   -தர்மம் கொண்டு வாழ  இறைவுலகில் பரமாத்மாவோடு ஐய்க்கியமான நாம் வணங்கும் ஆத்மாக்கள் ஆசீர்வாதிப்பர்கள் என்ற கருத்து கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து தூய ஆத்மாவாக வாழ்ந்து முடிப்போம்.           

                   சிந்தனையோடு இக்கருத்தை நடைமுறையில் ஏற்றுக்கொண்டால், உறுதியானவர்கள் தன் வாரிசுளை இவ்வழிநடத்திச் செல்வார்கள். அடுத்த தலை முறையினர் பலர் பின்பற்றுவார்கள். மூன்றாம் தலை முறைக்கு நிச்சயம் தேவையானவை. நான்காம் தலைமுறை நடைமுறைப்படுத்தும். நாம் அமைக்கும் நல்வழி நான்காம் தலைமுறைக்கான கட்டமைப்பாகும். வாழும் போதும் இயற்கை  எய்திய பின்பும் வாழ்க்கையை தெளிந்த நீரோடையைப் போல் அமைப்போம்.

வாருங்கள் ஒன்று பட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்

ஒற்றுமையாய் அதன் கீழ் பணியாற்றுவோம்.

காணும் இயற்கையெல்லாம் இறைவனின் பிம்பங்களே.

இயற்கை  எய்தியவர்கள் நம் தெய்வங்கள்.

உங்கள் இல்லத்தில் இயற்கை  எய்தியவர்களையே வணங்குங்கள்.

அவர்களே உங்கள் இன்ப துன்பங்களை உண்மை இறைவனிடம்

எடுத்துச் செல்லும் தெய்வங்கள் ஆகும்.

 

வாழ்க குருவம்சம்